திரைப்படங்களில் பெண்களை வெறும் காட்சிப் பொருளாகவோ, நடனம் மற்றும் பாடல்களுக்கு மட்டுமே பயன்படுத்துவதையோ நிறுத்த வேண்டும் என்று நடிகை சமந்தா ரூத் பிரபு வலியுறுத்தியுள்ளார்.
அவரது நடிப்பில் வெளியான 'மா இண்டி பங்காாரம்' திரைப்படத்தின் வெற்றி மற்றும் வரவேற்பைத் தொடர்ந்து அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சினிமாவில் பெண்களுக்கான கதாபாத்திரங்கள் வெறும் கவர்ச்சிக்காகவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ மட்டுமே உருவாக்கப்படும் நிலையை மாற்ற வேண்டிய நேரம் இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள சினிமா ரசிகர்கள் மிகவும் மாறிவிட்டதாகவும், அவர்கள் கதையின் நாயகன் ஆணா அல்லது பெண்ணா என்று பார்ப்பதில்லை என்றும் சமந்தா கூறியுள்ளார். ரசிகர்கள் வெறும் புதுமையான கதைகளையும், தங்களை மகிழ்வித்து நெகிழ வைக்கும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களையுமே எதிர்பார்க்கிறார்கள் என்றும், கதை நேர்மையாக எழுதப்பட்டால் மக்கள் அதை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பி.வி. நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா தயாரித்து நடித்துள்ள இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.








