சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி வெளியான 'தாய் கிழவி' திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கிராமப்புற பின்னணியில் நகைச்சுவை மற்றும் குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவான இத்திரைப்படம், வெளியாகி 18 நாட்கள் கடந்த நிலையிலும் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் தற்சமயம் போட்டியில் இல்லாதது இந்தப் படத்திற்குப் பெரும் சாதகமாக அமைந்துள்ளது.
சமீபத்திய தகவல்களின்படி, இப்படம் இந்தியாவில் மட்டும் இதுவரை 59.85 கோடி ரூபாய் வசூலித்து, 60 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை எட்டவுள்ளது. உலகளாவிய ரீதியில் இதன் மொத்த வசூல் 70 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. வெறும் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், முதல் மூன்று நாட்களிலேயே தனது முதலீட்டைத் திரும்பப் பெற்று லாபப் பாதைக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது. முதல் பாதியில் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையும், இரண்டாம் பாதியில் உணர்ச்சிப்பூர்வமான குடும்ப உறவுகளையும் மையமாகக் கொண்டுள்ள இத்திரைப்படம், குடும்பங்கள் கொண்டாடும் ஒரு வெற்றிப் படமாக மாறியுள்ளது.








