சென்னை: நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரும் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்றாகக் கலந்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர் திரிஷாவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த குஷ்பு, "திரிஷா எனக்கு மிகவும் நெருக்கமானவர். நான் சந்தித்த பெண்களிலேயே மிகவும் கண்ணியமானவர்களில் அவரும் ஒருவர். அவர் ஒரு மென்மையான இதயம் கொண்டவர்," என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு விமர்சனம் செய்வதில் சிலர் இன்பம் காண்பதாகவும், தற்போதைய பாப்பராசி கலாச்சாரம் தேவையில்லாத விவாதங்களை உருவாக்குவதாகவும் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை சமூகத்தைப் பாதிக்காத வரை, அதைப் பற்றி விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் குஷ்பு தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.








