கோலாலம்பூர், மார்ச் 9 –
நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகள் இணைந்து நடத்தவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதி பெற்றுள்ள மலேசியாவின் 'ஸ்பீடி டைகர்ஸ்' (Speedy Tigers) தேசிய ஹாக்கி அணிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
எகிப்தின் இஸ்மாயிலியா நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியின் மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில், ஜப்பானிடம் 4-5 என்ற கணக்கில் மலேசியா நூலிழையில் தோல்வியைத் தழுவியது. இருப்பினும், உலகத் தரவரிசையில் மலேசியா 15-வது இடத்தில் நீடிப்பதன் அடிப்படையில், உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கான தனது இடத்தை மலேசிய அணி உறுதி செய்துள்ளது.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் அன்வார் இப்ராஹிம், வீரர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் களத்தில் அவர்கள் காட்டிய அபாரமான போராட்ட குணமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று புகழ்ந்து தள்ளினார். "இந்தச் சாதனை அனைத்து மலேசியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது; உலகக் கோப்பை மேடையில் நமது வீரர்கள் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நாடு முழுவதும் அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தகுதியின் மூலம், மலேசியா தொடர்ந்து நான்காவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக 10-வது முறையாகவும் உலகக் கோப்பை ஹாக்கித் தொடருக்குத் தகுதி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. உலகக் கோப்பை போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 14 முதல் 30 வரை நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அணியின் பலவீனங்களைக் கண்டறிந்து ஆட்டத்திறனை மேலும் மேம்படுத்துமாறு பிரதமர் வீரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.








