கோலாலம்பூர், மார்ச்.03-
சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல முவா தாய் வீரர் ஜோஹான் கசாலி சுல்பிகார் உட்பட மத்திய கிழக்குப் பிரதேசங்களில் சிக்கித் தவிக்கும் மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோ ஜெரால்ட் ரெந்தாப் ஜாபு வலியுறுத்தியுள்ளார்.
நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மலேசியர்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும், விரைவில் அவர்கள் நாடு திரும்பத் தான் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கும் ரெந்தாப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விமானங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ள காரணத்தால், தனது குடும்பத்தினருடன் மக்காவில் சிக்கித் தவிப்பதாக ஜோஹான் கசாலி சுல்பிகார் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
உம்ரா கடமைகளுக்காக தனது குடும்பத்தினருடன் சவுதி அரேபியாவிற்குச் சென்றதாகவும் ஜோஹான் குறிப்பிட்டுள்ளார்.








