ஜோகூர் பாரு, மார்ச்.06-
தேசிய கால்பந்து அணியின் அந்நிய நாட்டைச் சேர்ந்த ஏழு ‘பாரம்பரிய’ வீரர்களின் மூதாதையர்கள், மலேசியாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறி நடத்தப்பட்ட ஆவண மோசடி விவகாரத்தில், தமக்குத் தொடர்பிருப்பதாகக் கூறுவோர் அதற்குரிய ஆதாரங்களுடன் தன்னை நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லலாம் என ஜோகூர் இடைக்கால சுல்தான், துங்கு மாஹ்கோத்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மலேசிய கால்பந்து சங்கமான எஃப்ஏஎம் மற்றும் ஏழு பாரம்பரிய வீரர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றமான CAS அண்மையில் தள்ளுபடி செய்து விட்டது. ஃபிஃபா விதித்த தண்டனைக்கு எதிராகச் செய்யப்பட்ட இந்த மேல்முறையீடு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், எக்ஸ் (X) தளத்தில் பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த JDT எனப்படும் Johor Darul Ta'zim கால்பந்து சங்கத்தின் உரிமையாளருமான துங்கு இஸ்மாயில், "உங்களிடம் இருக்கும் எந்த ஆதாரத்துடனும் என்னைக் கூட்டாக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். தயவு செய்து இதைச் செய்யுங்கள்," என சவால் விடுத்துள்ளார்.
முன்னதாக, தகுதிச் சான்றிதழ் தொடர்பான ஆவணங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறி அந்த ஏழு வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற் உலக கால்பந்து சம்மேளமான ஃபிஃபா தடை விதித்திருந்தது.
இதனை எதிர்த்து எஃப்ஏஎம் மேற்கொண்ட முயற்சிகளுக்குத் தற்போதைய CAS-இன் தீர்ப்பு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஜோகூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த துங்கு இஸ்மாயில், இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மிகவும் வெளிப்படையாகவும் உறுதியாகவும் பதிவுச் செய்திருப்பது மலேசியக் கால்பந்து வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








