பர்மிங்காம், மார்ச் 7
ஆல் இங்கிலாண்ட் ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில், மலேசியாவின் முன்னணி மகளிர் இரட்டையர் ஜோடியான பியர்லி டான் - தீனா முரளிதரன், 19 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான காலிறுதிப் போட்டியில், இந்த மலேசிய ஜோடி இந்தோனேசியாவின் பெப்ரியானா துவிபுஜி குசுமா - மெய்லிசா ட்ரியாஸ் புஸ்பிதாசாரி ஜோடியை எதிர்கொண்டது.
ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய பியர்லி-தீனா ஜோடி, 21-9, 21-18 என்ற நேர் செட் கணக்கில் 43 நிமிடங்களில் வெற்றியை வசப்படுத்தியது.
இதற்கு முன்னதாக 2007-ஆம் ஆண்டு வோங் பெய் டி - சின் ஈ ஹுய் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியதே மலேசிய மகளிர் இரட்டையர் பிரிவில் சாதனையாக இருந்தது. தற்போது 19 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை பியர்லி-தீனா ஜோடி சமன் செய்துள்ளது. அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள இவர்கள், அடுத்ததாக தென் கொரியாவின் பலம் வாய்ந்த ஜோடியான பேக் ஹா நா - லீ சோ ஹீ ஜோடியை எதிர்கொள்ள உள்ளனர்.
இந்தத் தொடரில் மலேசியாவின் ஆண்கள் இரட்டையர் ஜோடியான ஆரோன் சியா - சோ வூய் யிக் ஜோடியும் அரையிறுதிக்கு முன்னேறி மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.








