சிட்னி, மார்ச். 11-
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது, ஈரானில் நிலவும் அரசியல் சூழலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஈரான் மகளிர் கால்பந்து அணியைச் சேர்ந்த மேலும் இரண்டு பேர் ஆஸ்திரேலியாவிடம் அரசியல் புகலிடம் கோரியுள்ளனர்.
ஏற்கனவே ஐந்து வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில், தற்போது ஒரு வீராங்கனை மற்றும் ஒரு தொழில்நுட்ப உதவியாளர் என மேலும் இருவர் இந்த முடிவை எடுத்துள்ளனர். கடந்த வாரம் தென் கொரியாவுக்கு எதிரான போட்டியின் போது, ஈரானிய தேசிய கீதத்தைப் பாட மறுத்து அமைதி காத்த இவர்கள், தாயகம் திரும்பினால் தங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சிட்னி விமான நிலையத்திலிருந்து ஈரான் திரும்பவிருந்த குழுவிலிருந்து பிரிந்த இந்த இருவருக்கும் மனிதாபிமான அடிப்படையில் விசா வழங்க ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க் ஒப்புதல் அளித்துள்ளார். தற்போது மொத்தம் ஏழு பேர் ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பாகத் தங்கியுள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்க ஆஸ்திரேலியாவின் முன்னணி கால்பந்து கழகங்கள் முன்வந்துள்ளன.
ஈரானிய அரசு ஊடகங்கள் இவர்களைக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் சர்வதேச விளையாட்டு அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








