வாஷிங்டன், மார்ச் 11 –
மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் நிலவி வரும் போதிலும், 2026-ஆம் ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் ஈரான் தேசிய அணி பங்கேற்கத் தடை ஏதும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இன்ஃபான்டினோ, ஈரானில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் அந்நாட்டு அணியின் பங்கேற்பு குறித்து விவாதித்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் நேரடி ராணுவ மோதல்கள் மற்றும் அரசியல் ரீதியான விரிசல்கள் இருக்கும் நிலையிலும், "ஈரான் அணி அமெரிக்க மண்ணில் நடைபெறும் போட்டிகளில் போட்டியிடுவதை தாம் வரவேற்பதாக" ட்ரம்ப் மீண்டும் உறுதிபடக் கூறியுள்ளார். இது குறித்து இன்ஃபான்டினோ கூறுகையில், "உலகக்கோப்பை போன்ற ஒரு நிகழ்வு மக்களை ஒன்றிணைக்க இப்போது முன்பை விட அதிகம் தேவைப்படுகிறது; இதற்காக அதிபருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவுடனான போர்ச் சூழல் மற்றும் வீரர்களின் பாதுகாப்பு காரணமாக, தங்களது தேசிய அணியை உலகக்கோப்பைக்கு அனுப்புவதில் சந்தேகம் இருப்பதாக ஈரான் கால்பந்து கூட்டமைப்புத் தலைவர் மெஹ்தி தாஜ் தெரிவித்திருந்தார். மேலும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பையின் போது ஈரான் வீராங்கனைகள் அரசியல் தஞ்சம் கோரிய சம்பவமும் ஈரான் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
அட்டவணைப்படி, ஈரான் அணி தனது முதல் சுற்றில் நியூசிலாந்து, பெல்ஜியம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் கலிபோர்னியா மற்றும் சியாட்டில் ஆகிய நகரங்களில் விளையாட உள்ளது. அதிபரின் இந்த வெளிப்படையான அறிவிப்பு, ஈரான் அணி பங்கேற்பதில் நிலவி வந்த சிக்கலான சட்ட மற்றும் விசா பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








