ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நேற்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற தேசிய ஸ்குவாஷ் நட்சத்திரமான எஸ். சிவசங்கரிக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது உயரிய பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
சிவசங்கரியின் இந்த வெற்றியானது நாட்டின் பெருமையை உயர்த்துவதோடு, இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகவும், ஊக்கமாகவும் இருப்பதாக அன்வார் விவரித்துள்ளார்.
மேலும், இந்த சாதனையானது தேசிய விளையாட்டு உலகிற்குப் பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், உலக அரங்கில் மலேசியாவுக்கு பெருமை சேர்த்து வரும் நமது வீரர்களின் உறுதி, கட்டுப்பாடு மற்றும் போராட்ட மனப்பான்மைக்கு சான்றாகும் என்றும் அன்வார் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உலகத் தரவரிசைப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ள சிவசங்கரி, இறுதிப்போட்டியில் 19-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கணை மரீனா ஸ்டெபனோனியை 11-7, 11-4, 11-8 என நேரடி செட் கணக்கில் வென்று பட்டத்தை கைப்பற்றினார்.
28 நிமிடங்களில் இந்த வெற்றியை அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.








