ஈப்போ, மார்ச்.02-
ஈப்போவிலுள்ள பேராக் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் ஆடுகள மேம்பாட்டுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால், வரும் செப்டம்பர் மாதம் முதல் அங்கு மீண்டும் காற்பந்துப் போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராக் மாநில வீடமைப்பு, மற்றும் ஊராட்சிமன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் Sandrea Ng இது குறித்து விவரிக்கையில், கடந்த ஜூன் 2025-இல் தொடங்கிய ஆடுகளப் புனரமைப்புப் பணிகள் தற்போது 75 விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நீர் பாசன வசதி, தொழில்நுட்பச் சீரமைப்பு மற்றும் கூடுதல் கட்டுமானப் பணிகள் காரணமாக, திட்டமிடப்பட்ட கால அட்டவணையை விடப் பணிகள் சற்றுத் தாமதமடைந்துள்ளன. இருப்பினும், புதிய நீர் பாசன முறை, வடிகால் அமைப்பு மற்றும் புதிய புற்களை நடும் பணிகள் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








