2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியோடு வெளியேறிய போதிலும், வரலாற்றுச் சாதனை படைத்து நாடு திரும்பிய நார்வே தேசிய கால்பந்து அணிக்குத் தலைநகர் ஆஸ்லோவில் சுமார் 90,000 ரசிகர்கள் ஒன்றுதிரண்டு பிரம்மாண்டமான முறையில் ‘ஹீரோ’ வரவேற்பு அளித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான காலிறுதி ஆட்டத்தில், நார்வே அணி 1-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் கூடுதல் நேரத்தில் தோல்வியடைந்து வெளியேறியது. எனினும், 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பைத் தொடருக்குத் தகுதி பெற்று, வரலாற்றிலேயே முதன்முறையாகக் காலிறுதி வரை முன்னேறிய நார்வே அணியின் இந்தச் சாதனையை அந்நாட்டு மக்கள் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர்.
தலைநகர் ஆஸ்லோவில் உள்ள அரச அரண்மனையின் முன்பாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று அணி வீரர்களை வரவேற்றனர். அப்போது வீரர்களும் ரசிகர்களும் இணைந்து நார்வேயின் புகழ்பெற்ற பாரம்பரிய "வைக்கிங் ரோ" முழக்கத்தை எழுப்பினர். நார்வே நாட்டின் இளவரசர் ஹோகோன் நேரில் கலந்துகொண்டு இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை வழிநடத்தினார். இவரோடு மன்னர் ஹரால்டும் வீரர்களை நேரில் சந்தித்துப் பாராட்டினார்.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் நார்வே அணிக்காக 7 கோல்களை அடித்து அசத்திய நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் மற்றும் சாண்டர் பெர்ஜ் ஆகியோர் அரச அரண்மனைக்குள் மன்னரை நேரில் சந்தித்துப் பேசினர். எனினும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தனிப்பட்ட பயணங்கள் காரணமாக, அவர்கள் இருவரும் பொதுவெளியில் நடைபெற்ற பேருந்து ஊர்வலம் மற்றும் ரசிகர்களின் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை என்று பயிற்சியாளர் ஸ்டேல் சோல்பாக்கன் தெரிவித்துள்ளார்.








