பெட்டாலிங் ஜெயா, மார்ச் 10:
மலேசியக் கால்பந்து சங்கத்திற்குள் (FAM) இருக்கும் சில நபர்கள், தங்களின் சுயலாபத்திற்காகத் தன்னை பலிகடாவாக்க (Scapegoat) முயற்சிப்பதாக ஜோகூர் இளவரசரும், ஜோகூர் தாரூல் தஜிம் (JDT) காற்பந்து கழகத்தின் உரிமையாளருமான துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் (TMJ) அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சமீபகாலமாக மலேசிய தேசிய கால்பந்து அணியைச் சுற்றி எழுந்துள்ள பல்வேறு சர்ச்சைகள் மற்றும் ஃபிஃபா (FIFA) விவகாரங்கள் குறித்து சமூக வலைதளங்கள் வாயிலாகக் கருத்து தெரிவித்துள்ள அவர், FAM அமைப்பில் உள்ள சிலருக்குத் தன் மீது நீண்டகாலமாக அதிருப்தி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். "என்னைப் பயன்படுத்தி அவர்களால் பணம் சம்பாதிக்க முடியாததே இந்த அதிருப்திக்குக் காரணம். சிலர் என்னிடம் வந்து திட்டங்களைப் பெற்றுத் தருமாறு உதவி கேட்டனர், இன்னும் சிலர் ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) விசாரணையிலிருந்து தப்பிக்க உதவி கோரினர்," என்று அவர் உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார்.
குறிப்பாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான மத்திய அரசு தேசிய அணிக்கு நிதி ஒதுக்கீடு செய்தபோது, அந்த நிதியை நிர்வகிக்கும் பொறுப்பில் தங்களைச் சேர்க்காததால் சில தரப்பினர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால் தனது நற்பெயருக்குக் கங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளிருப்பவர்கள் சதி செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஃபிஃபா விவகாரத்தில் வீரர்களின் குடியுரிமைத் தகுதி குறித்த சர்ச்சை எழுந்தபோது, தேசியப் பதிவுத் துறையின் (JPN) அதிகாரப்பூர்வ ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல், தவறான ஆவணங்களைச் சமர்ப்பித்த அதிகாரிகளைப் பாதுகாக்கவே வீரர்கள் மீது பழி போடப்பட்டதாக அவர் தெரிவித்தார். "உள்ளிருப்பவர்களைக் காப்பாற்ற வீரர்களைப் பலிகடாவாக்குகிறார்கள். இதற்குக் காரணமான முகவர்கள் மற்றும் FAM அதிகாரிகளை ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை?" என அவர் காட்டமாக வினவியுள்ளார். மலேசியக் கால்பந்து துறையில் நிலவும் இத்தகைய முறைகேடுகளைக் களையாமல் முன்னேற்றம் காண்பது கடினம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.








