அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாகச் செயல்பட்டு, விளையாட்டு அமைப்புகளின் அரசியல் நடுநிலைமை விதிகளைத் தொடர்ந்து மீறி வருவதாக உலகக் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவிற்கு எதிராகப் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன. லண்டனைத் தளமாகக் கொண்ட 'ஃபேர்ஸ்கொயர்' என்ற விளையாட்டு மனித உரிமைகள் அமைப்பு, இன்ஃபான்டினோவிற்கு எதிராக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 2020-ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக இன்ஃபான்டினோ இருந்து வருவதால், ஒலிம்பிக் அமைப்பின் அடிப்படை விதிகளின்கீழ் இந்த விசாரணை கோரப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியின் போது, அமெரிக்க அணியின் முன்கள வீரர் ஃபோலரின் பலோகன் பெற்ற சிவப்பு அட்டைக்கான தடையை ஃபிஃபா நிருவாகம் திடீரென ரத்து செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிபர் டொனால்ட் டிரம்ப் தமக்கு நேரிடையாக விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்தத் தடை நீக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், களத்தில் நடுவர்கள் எடுக்கும் முடிவுகளில் இத்தகைய அரசியல் தலையீடுகள் அனுமதிக்கப்பட்டது விளையாட்டு உலகினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும், கடந்த டிசம்பர் மாதம் வாஷிங்டனில் நடைபெற்ற உலகக் கோப்பை குலுக்கல் நிகழ்வின் போது, ஃபிஃபாவின் உயர்மட்டக் குழுவின் ஆலோசனையின்றி இன்ஃபான்டினோ தன்னிச்சையாக 'ஃபிஃபா அமைதிப் பரிசு' என்ற புதிய விருதை உருவாக்கி அதனை அதிபர் டிரம்பிற்கு வழங்கியதும் இந்தப் புகாரில் முதன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இன்ஃபான்டினோ ஃபிஃபாவின் நன்னடத்தை விதி எண் 15-ஐ மீறியுள்ளது நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10,000 சுவிஸ் ஃபிராங்க் அபராதமும், கால்பந்து தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட இரண்டு ஆண்டுகள் வரை தடையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இப்புகாருக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 50 உறுப்பினர்களும், நார்வே கால்பந்து சம்மேளனமும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரி இதுகுறித்துப் பேசுகையில், முறையான புகார் கிடைக்கப் பெற்றவுடன் இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.








