பிரபல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான கே. ராஜன் (85), பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது ஓட்டுநருடன் காரில் வந்த அவர், சிறிது தூரம் நடந்து செல்வதாகக் கூறிவிட்டு பாலத்தின் மீது சென்ற சில நிமிடங்களில் ஆற்றில் குதித்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர் விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர். அவர் இந்த தீவிர முடிவை எடுத்ததற்கான துல்லியமான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், குடும்பப் பிரச்சனை காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் கூறப்படும் சூழலில், காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1980-களிலிருந்து தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் மற்றும் நடிகர் எனப் பன்முகத் திறமைகளுடன் விளங்கிய கே. ராஜன், 'பிரம்மச்சாரிகள்', 'தங்கமான தங்கச்சி', 'டபிள்ஸ்' உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். மேலும், அஜித் குமாரின் 'துணிவு', 'பகாசூரன்' போன்ற படங்களிலும் அவர் நடித்துள்ளார். சினிமா ஆடியோ வெளியீட்டு விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் சிறு தயாரிப்பாளர்களின் நலன்களுக்காகவும், முன்னணி நடிகர்களின் அதிகப்படியான சம்பள உயர்விற்கு எதிராகவும் எதார்த்தமான, துணிச்சலான கருத்துகளைப் பேசி எப்போதும் செய்திகளில் இடம்பிடிக்கும் அவரது இந்த மறைவு, ஒட்டுமொத்தத் தமிழ்த் திரையுலகினரையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.








