நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இடையேயான 50 ஆண்டுகால நட்பு உருவானதற்குப் பின்னால் உள்ள ஒரு உருக்கமான சோகக் கதை தற்போது வெளியாகியுள்ளது.
கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான 'ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' தயாரிப்பில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 173' திரைப்படத்திற்கு 'தர்மன்' என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவர்களின் நீண்ட கால நட்பு உருவான விதம் குறித்த பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் அறிமுகமான 'அபூர்வ ராகங்கள்' 1975 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, கமல்ஹாசனுக்கு 'கோவிந்தராஜன்' என்ற நெருங்கிய நண்பர் இருந்தார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், ரஜினியின் முதல் படப்பிடிப்பைக் காண நேரில் வந்துள்ளார்.
அப்போது ரஜினிகாந்திற்கு வைக்கப்பட்ட பிரெஞ்சு தாடி உள்ளிட்ட தோற்றம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நண்பரின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. படத்தில் ரஜினி ஏற்றிருந்த கதாபாத்திரமும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் ஒரு நபருடையதாகும். தன் நண்பன் விரைவில் இறந்துவிடுவான் என்ற உண்மையை அவனிடம் சொல்ல முடியாமல் தவித்த கமல், காலப்போக்கில் ரஜினியிடம் தன் நண்பனின் முகத்தையும் சாயலையும் காணத் தொடங்கினார். தன் நண்பன் மீது வைத்திருந்த ஒட்டுமொத்த பாசத்தையும் ரஜினி மீது காட்டியதாக கமல் உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். இந்த சோகமான சம்பவமே இத்தனை ஆண்டுகள் கடந்தும் இவர்களின் ஆழமான நட்பிற்கு அடித்தளமாக அமைந்துள்ளது.








