இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் 'துரந்தர்: தி ரிவெஞ்ச்'. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிகள் இன்று மாலை இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் திரையிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் சரியான நேரத்தில் படக்கோப்புகள் வந்து சேராத காரணத்தினால், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள பிராட்வே சினிமாஸ் உள்ளிட்ட பல திரையரங்குகள், தமிழ் பதிப்பிற்கான காட்சிகள் ரத்து செய்யப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதற்குப் பதிலாக ஹிந்தி பதிப்பு திரையிடப்படும் என்றும், டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு விரைவில் பணம் திரும்பத் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஹிந்தி பதிப்பு எந்தவிதத் தடங்கலும் இன்றி திரையிடப்பட்டு வருகிறது.
முன்பதிவு மூலம் சுமார் 43 கோடி ரூபாய் வரை ஈட்டியுள்ள இந்தப் படத்திற்கு, தென்னிந்திய மொழிகளில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் பின்னடைவு ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படம், தற்போதைய சூழலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.








