சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில், ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான 'கருப்பு' திரைப்படம் நிதிப் பிரச்சினைகள் காரணமாக வெளியீட்டு நாளில் தியேட்டர்களில் திரையிடப்படுவதில் தாமதத்தை எதிர்கொண்டது. இந்தச் சூழ்நிலையில் தயாரிப்பாளரின் முறையான அனுமதியின்றி கியூப் சினிமா மூலம் மும்பை, புனே மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களில் படம் திரையிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தயாரிப்பாளர் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார். மேலும், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தங்களின் சட்ட ஆலோசகர் மூலம் பொது அறிவிப்பு மற்றும் கடுமையான பைரசி எச்சரிக்கை ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது. அதில், பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத உள்ளடக்கத்தையும் பொதுமக்களோ அல்லது மற்றவர்களோ பதிவிறக்கம் செய்யவோ, பகிரவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சிவில் மற்றும் கிரிமினல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.








