கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவராஜ்குமார் மற்றும் தமிழ் நடிகர் - இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஆகியோர் இணைந்து புதிய திரைப்படமொன்றில் தந்தை - மகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். அறிமுக இயக்குனர் கௌதம் சிவராமன் இயக்கும் இத்திரைப்படம், தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு எளிய குடும்பக் கதையாக உருவாகவுள்ளது. இத்திரைப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் சென்னையில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
பாடல்கள், காதல், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்குத் திரைப்படமாக இது இருக்கும் என்றும், இதில் இரட்டை அர்த்த வசனங்களோ அல்லது ஆபாசக் காட்சிகளோ இடம்பெறாது என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் சிவராஜ்குமார் மிகவும் ஈர்க்கப்பட்டு, உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டதுடன், படத்திற்கு அவரே தமிழில் டப்பிங் பேசவும் முடிவு செய்துள்ளார். அபிஷனின் முந்தைய படமான 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தில் அவரது நடிப்பைப் பார்த்துப் பாராட்டிய சிவராஜ்குமார், அவரை ஒரு சிறந்த திறமையாளர் என்றும் புகழ்ந்துள்ளார். மேலும், இத்திரைப்படத்தில் தெலுங்குத் திரையுலகில் பிரபலமான யோகலட்சுமி மற்றும் ஷிவானி நகரம் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர்.








