தென்னிந்தியத் திரையுலகில் மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ஐஸ்வர்யா லட்சுமியின் நிகர சொத்து மதிப்பு 25 கோடி முதல் 40 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் சிறந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமியின் இந்த சொத்து மதிப்பு, அவரது நடிப்பு, விளம்பரங்கள் மற்றும் தயாரிப்பு முயற்சிகள் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர் ஒரு திரைப்படத்திற்கு பட்ஜெட்டைப் பொறுத்து 50 லட்சம் முதல் 90 லட்சம் ரூபாய் வரை சம்பளமாகப் பெறுவதாகத் தெரிகிறது.
மாடலிங் துறையில் தனது பயணத்தைத் தொடங்கி, 2017-ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ காவியத்தில் 'பூங்குழலி' கதாபாத்திரத்தில் நடித்துப் பெரும்புகழ் பெற்றார். அண்மையில் வெளியான ‘மாமன்’, ‘தக் லைஃப்’ ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்திலும் கீர்த்தி நாயர் கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்துள்ளார். மேலும், தெலுங்கில் 'SYG - சாம்பராலா ஏட்டி கட்டு' மற்றும் மலையாளத்தில் 'ஆஷா' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.








