இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் கடந்த மார்ச் 12-ஆம் தேதி வெளியான 'மேட் இன் கொரியா' திரைப்படம், தற்போது நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து வரலாறு படைத்துள்ளது. ஆங்கிலம் அல்லாத திரைப்படங்களுக்கான சர்வதேசப் பட்டியலில் இந்தப் படம் முதல் இடத்தைப் பிடித்துள்ளதுடன், இந்தியா உட்பட சுமார் 24 நாடுகளில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த 'செண்பா'பிரியங்கா மோகன் என்ற இளம்பெண், தனது நீண்ட காலக் கனவான தென் கொரியாவுக்குச் சென்ற பிறகு அங்கு சந்திக்கும் சவால்களையும், புதிய கலாச்சார அனுபவங்களையும் மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. தென்னிந்தியத் திரையுலகிலிருந்து ஒரு திரைப்படம் நெட்ஃபிளிக்ஸின் உலகளாவிய பட்டியலில் இவ்வளவு குறுகிய காலத்தில் முதலிடத்தைப் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தத் திரைப்படத்தில் கொரிய நடிகர்கள் பார்க் ஹே-ஜின் மற்றும் நோ ஹோ-ஜின் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழகம் மற்றும் சியோல் நகரங்களில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் உணர்ச்சிகரமான கதைக்களம் மற்றும் அழகான காட்சிகள் சர்வதேச ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றியைக் குறித்துப் பேசிய பிரியங்கா மோகன், தனது கதாபாத்திரத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து கிடைத்து வரும் ஆதரவு நெகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.








