சிவகார்த்திகேயனை வைத்து சுதா கொங்கரா இயக்கியிருக்கும் பராசக்தி திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி பத்தாம் தேதி வெளியாகிறது. அதற்கு முந்தைய நாள் விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாகவுள்ளது.
மணிரத்னம் மற்றும் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. அவர்களிடம் வேலையைக் கற்றுக் கொண்டு துரோகி படத்தை இயக்கி தமிழில் இயக்குநராக அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. அதற்கு பிறகு சில வருடங்கள் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர், 2016 ஆம் ஆண்டு மாதவன், ரித்திகா சிங் உள்ளிட்டோரை வைத்து இறுதிச்சுற்று படத்தை இயக்கினார். பாக்ஸிங்கை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட அப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. ரித்திகா சிங் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வாங்கினார்.
இந்நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா ரஜினியை வைத்து படம் இயக்கும் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். ரஜினியின் மிகப்பெரிய ரசிகை தாம் எனக் குறிப்பிட்ட சுதா, அவரை வைத்து அந்தக் காதல் கதையை எடுக்க வேண்டும் என்று ஆசை. ரஜினியை வைத்து முதல் மரியாதை பாணியில் ஒரு படம் எடுக்க வேண்டும். அந்தப் படத்துக்கான கதை என்னிடம் இருக்கிறது. அதை முழுவதும் தயார் செய்ய வேண்டும். காதல் கதை மட்டுமில்லை எல்லா விதமான படங்களையும் எடுக்க விருப்பம்தான். அதே சமயம் விரைவில் சினிமாவிலிருந்து ஓய்வு பெற எண்ணுவதாகவும் சுதா கூறியுள்ளார்.








