தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்து கொள்கிறார். இந்திய சினிமாவை பிரபலப்படுத்தும் வகையில் அதன் லோகோவை அஜித்குமார் தனது கார் மற்றும் ரேஸிங் உடையில் பொறித்ததுள்ளார். முன்னதாக தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் Indian Film Industry என்ற லோகோவை அச்சிடவுள்ளதாக அஜித்குமார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.