May 20, 2026
Thisaigal NewsYouTube
சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

Share:

கடந்த மே 18-ஆம் தேதி, சைப்பிரஸ் கடற்கரைக்கு அருகே, சிறைபிடிக்கப்பட்ட குளோபல் சுமூத் புளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் கப்பல் பணியாளர்களிடையே உள்ள 25 மலேசியர்களை உடனடியாக விடுவிக்குமாறு மலேசிய அரசாங்கம் இஸ்ரேலிய சியோனிச ஆட்சியிடம் வலியுறுத்தியுள்ளது.

அக்குழுவினர் இஸ்ரேல் கடற்பரப்பை தாண்டாத நிலையிலும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கும், சர்வதேச சட்டங்களுக்கும் எதிரான செயல் என வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசான் கண்டித்துள்ளார்.

அவர்கள் எந்த அத்துமீறலிலும் ஈடுபடவில்லை என்றும், சைப்பிரஸ் கடற்கரையிலிருந்து வெகுதூரத்தில் இருந்ததாகவும் முகமட் ஹசான் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இஸ்ரேலிய அதிகாரிகள் அவர்களைத் தடுத்து வைத்திருப்பது மனித உரிமைகளுக்கு எதிரான செயல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், அக்கப்பலில் இருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளும் இஸ்ரேலிய சியோனிச ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக முகமட் ஹசான் நேற்று சுபாங்கிலுள்ள தேசிய விமானப் படைத் தளத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இதற்கு முன்பு தடுத்து வைக்கப்பட்டிருந்த 10 மலேசியர்களை பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு திரும்பக் கொண்டு வர உதவியதற்காக, துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிதான் மற்றும் அந்நாட்டு அரசாங்கத்திற்கும் முகமட் ஹசான் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Related News