மலேசியாவிற்குப் புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், தங்களின் முதலாளிகள் வந்து அழைத்துச் செல்லும் வரை தற்காலிகமாகத் தங்குவதற்கென டிரான்சிட் மையங்கள்' அமைக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விஸ்மா எச்ஆர்டி கார்ப்-இல் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டத்தோஸ்ரீ ரமணன், இந்த மையங்கள் விமான நிலையங்களின் நெரிசலைக் குறைப்பதோடு, தொழிலாளர்கள் உரிய முதலாளிகளிடம் மட்டுமே ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்யும் என்றார்.
இது தடுப்புக்காவல் மையம் அல்ல என்றும், இதற்கான தகுந்த இடங்களை மனித வள அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான 'ஒருங்கிணைந்த ஓரிட மையம் மனிதவள அமைச்சின் கீழ் மாற்றப்பட்டாலும், பாதுகாப்புச் சோதனை மற்றும் விசா வழங்கும் அதிகாரம் தொடர்ந்து உள்நாட்டு அமைச்சின் கீழுமே இருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.








