நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஒன்பது மாநிலங்களை உள்ளடக்கிய 15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் இந்த ஆண்டு முதல் படிப்படியாக இயங்கத் தொடங்கும் என்று டிஜிட்டல் துறை துணை அமைச்சர் வில்சன் உகக் கும்போங் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மற்றும் பகாங் மாநிலங்களில் தலா ஒரு மையத்தின் கட்டுமானப் பணிகள் முற்றிலும் நிறைவடைந்துள்ள வேளையில், 9 மையங்கள் கட்டுமானத்திலும், 4 மையங்கள் திட்டமிடல் கட்டத்திலும் உள்ளன. வெள்ளக் காலங்களில் தற்காலிக நிவாரண மையங்களாக பள்ளிகளைப் பயன்படுத்துவதைக் குறைத்து, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கவே இந்த இருநோக்கு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
தலா 500 பேரைத் தாங்கும் வசதி, சமையலறை, மருத்துவ அறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன், வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக அவர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.








