ஜோகூர் மாநிலத் தேர்தலில் ஆட்சியை அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற முடியாவிட்டாலும், மக்களின் குரலை சட்டமன்றத்தில் வலுவாக பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியாக செயல்படத் தேவையான தொகுதிகளில் வெற்றி பெறுவதே தங்களின் இலக்கு என பெரிக்காத்தான் நேஷனல் தெரிவித்துள்ளது.
மாநில அரசின் செயல்பாடுகளை கண்காணித்து, பொறுப்புணர்வுடன் செயல்படச் செய்வதற்கும், மக்களின் நலனுக்காக வலுவான "செக்ஸ் அண்ட் பேலன்சஸ்" அமைப்பை உருவாக்குவதற்கும் போதுமான இடங்களை கைப்பற்றுவோம் என நேற்று இரவு பாரிட் ராஜாவில் நடைபெற்ற 'பெர்சத்து டெமி ஜொகூர்' பொதுக்கூட்டத்தில் அக்கூட்டணியின் தலைவர் தான் ஸ்ரீ முஹிதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநில அரசு மக்களின் வரிப்பணத்தை எவ்வாறு செலவிட்டது என்பது குறித்து பொதுமக்களுக்கு தெளிவாக விளக்கமளிக்க வேண்டும் என்றும், எந்தவித கண்காணிப்பும் இன்றி அரசு செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், ஜோகூர் மாநிலத் தேர்தலை, மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பாக வாக்காளர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், அரசாங்கத்தை பொறுப்புடன் செயல்பட வைக்கும் சட்டமன்றத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








