மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் நாட்டின் முன்னணி வீராங்கனை கே. லெஷனா தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
ஜப்பானின் ஹினா அகேச்சியுடன் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், லெஷனா முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி நல்ல தொடக்கத்தைப் பெற்றார். ஒரு கட்டத்தில் முதல் செட்டில் 20-11 என லெஷனா வலுவான முன்னிலையில் இருந்தபோது, அகேச்சி தொடர்ச்சியாக 8 புள்ளிகளைக் குவித்து கடுமையான சவாலை அளித்தார். எனினும், லெஷனா போராடி அந்த செட்டைத் தன்வசப்படுத்தினார்.
ஆனால், இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களில் உலகத் தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள ஜப்பானிய வீராங்கனை அகேச்சி ஆட்டத்தின் போக்கை முற்றிலும் மாற்றினார். லெஷனா புள்ளிகளை விரைவாகப் பெற முயன்று தனது கவனத்தை இழந்ததால், அகேச்சி அதனைச் சாதகமாக்கிக் கொண்டு அடுத்த இரு செட்களையும் 21-12, 21-10 என்ற கணக்கில் மிக எளிதாகக் கைப்பற்றினார்.
சுமார் 57 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் 21-19, 12-21, 10-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்த லெஷனாவின் அரையிறுதி கனவு கலைந்தது. இரண்டாவது சுற்றில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் இருந்த டோமோகா மியாசாகியை வீழ்த்தி லெஷனா சாதனை படைத்திருந்த நிலையில், இந்தத் தோல்வி அவருக்கு ஏமாற்றமாக அமைந்தது. லெஷனா அடுத்ததாக சிங்கப்பூர் ஓபன் தொடரில் பங்கேற்கவுள்ளார்.








