கோலாலம்பூர், ஜூலை.26-
இவ்வாண்டு சிப்பாங் அனைத்துலக சுற்றுப்பாதையில், Formula 1 Grand Prix போட்டியை மலேசியா நடத்தவுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, உலகத் தரத்திலான அனைத்துலக விளையாட்டு நிகழ்வுகளை நடத்தும் மலேசியாவின் திறன் மற்றும் தயார் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, பஹ்ரைன் நாட்டின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான மாட்சிமை தங்கிய Salman bin Hamad Al Khalifa மற்றும் Formula 1 தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி Stefano Domenicali ஆகியோருடன் கலந்துரையாடியதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் மலேசியா மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கியதற்காக பஹ்ரைனுக்கு தாம் நன்றி தெரிவித்ததாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தக் கூட்டுமுயற்சி, உலகத்தரம் வாய்ந்த ஒரு விளையாட்டு நிகழ்வை நடத்துவதை விடவும் மேலானது என்றும் அவர் விவரித்துள்ளார்.
இதனிடையே, மலேசியா–பஹ்ரைன் நாடுகளுக்கிடையேயான நட்பு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் நெருங்கிய ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதுடன், பெரிய அளவிலான அனைத்துலக நிகழ்வுகளை நடத்தும் மலேசியாவின் திறனை உலகுக்கு மீண்டும் நிரூபிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதிலுமிருந்து Formula 1, FIA மற்றும் ரசிகர்களை மீண்டும் சிப்பாங்கில் வரவேற்க மலேசியா முழுமையாக தயாராக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.








