500-வது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ள பயிற்சியாளர் டிராவிட், அவர் இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி நேற்று வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் களம் இறங்கியதன் மூலம் அவர் பங்கேற்ற ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை 500-ஐ எட்டியது. இந்த மைல்கல்லை எட்டிய 10-வது வீரர், இந்திய அளவில் 4-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். இந்தியாவில் ஏற்கனவே சச்சின் தெண்டுல்கர் (664 ஆட்டம்), டோனி (538), ராகுல் டிராவிட் (509) ஆகியோர் 500-க்கும் அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளனர்.
34 வயதான விராட் கோலி 2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அடியெடுத்து வைத்தார். இதுவரை 111 டெஸ்ட், 274 ஒரு நாள் போட்டி மற்றும் 115 இருபது ஓவர் போட்டிகளில் ஆடியுள்ளார். ஏறக்குறைய 15 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் விராட் கோலிக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விராட்கோலி எப்படிப்பட்ட வீரர் என்பதை அவர் நிகழ்த்திய சாதனை மற்றும் புள்ளி விவரங்களே பறைசாற்றும். இந்திய அணியில் அவர் நிறைய வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. இதேபோல் நாடு முழுவதும் ஏராளமான இளைஞர்களுக்கும் உந்துசக்தியாக திகழ்கிறார்.