கோலாலம்பூர், பிப்ரவரி.05-
ஹரிமாவ் மலாயா பாரம்பரிய அணியைச் சேர்ந்த ஏழு வீரர்கள் சம்பந்தப்பட்ட ஆவண மோசடி விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தக் கட்ட நடவடிக்கைகளுக்காக அவை சட்டத்துறை அலுவலகமான ஏஜிசிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
சட்டத்துறை அலுவலகத்திடமிருந்து அறிவுறுத்தல்கள் கிடைத்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சைஃபுடின் தெரிவித்துள்ளார்.
சுயேட்சை விசாரணைக்குழு கண்டறிந்தவைகள் தொடர்பாக மலேசிய கால்பந்து சங்கமான எஃப்ஏஎம் அளித்த புகாரை போலீஸ் தரப்பிலிருந்து அமைச்சு பெற்றுக் கொண்டதையும் சைஃபுடின் உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், மோசடி செய்த குற்றத்திற்காக தண்டனைச் சட்டம் பிரிவு 420-இன் கீழ் போலீசார் ஒரு விசாரணை ஆவணத்தையும் திறந்துள்ளதாக சைஃபுடின் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், சம்பந்தப்பட்ட 7 வீரர்களின் பிறப்புப் பத்திரங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க தேசியப் பதிவிலாகாவின் உதவியை நாடியிருப்பதாகவும் சைஃபுடின் தெரிவித்துள்ளார்.








