தனிப்பட்ட காரணங்களுக்காகப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ஜேவியர் மஷெரானோவிற்குப் பதிலாக, அர்ஜென்டினாவைச் சேர்ந்த 62 வயதான கில்லெர்மோ ஹோயோஸ் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு பார்சிலோனா இளையோர் அணியில் மெஸ்ஸியின் திறமையை உலகிற்கு அடையாளம் காட்டிய முக்கிய நபர்களில் ஹோயோஸ் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மெஸ்ஸியே இவரைத் தனது 'கால்பந்து தந்தை'என்று பலமுறை புகழ்ந்துள்ளார்.
இன்டர் மியாமி அணியின் பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹோயோஸ், செய்தியாளர்களிடம் பேசுகையில், மெஸ்ஸியுடனான தனது நட்பு பல ஆண்டுகள் பழமையானது என்றும் அது மாற்ற முடியாதது என்றும் தெரிவித்தார். இருப்பினும், அந்த நட்பு காரணமாகப் பயிற்சிக் களத்தில் தான் காட்டும் கண்டிப்பு மற்றும் ஒழுக்கம் குறையாது என்றும், அணியின் வெற்றிக்காக மெஸ்ஸியை மிகக் கடுமையாக உழைக்க வைப்பேன் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
மஷெரானோ தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் எம்.எல்.எஸ் கோப்பையை வென்ற இன்டர் மியாமி அணி, தற்போது கிழக்கு பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள ஹோயோஸ், மெஸ்ஸியுடன் மீண்டும் இணைந்து அணியை அடுத்த கட்ட வெற்றிகளுக்கு அழைத்துச் செல்வார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.








