இளைஞர்களிடையே நட்புறவை வளர்க்கவும், ராஜேந்திர சோழனின் கடாரப் படையெடுப்பு வரலாற்றை நினைவூட்டவும் பேரா தம்புன் விளையாட்டு மன்றத்தின் சார்பில் 'சோழா கிண்ண' கால்பந்து போட்டி ஈப்போ பாடாங்கில் சிறப்பாக நடைபெற்றது.
ஏற்பாட்டுக் குழுத் தலைவர் லிங்கேஸ்வரன் அண்ணாமலை தலைமையில், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்காக முதல் முறையாக நடத்தப்பட்ட இப்போட்டியில் கெடா, சிலாங்கூர், பினாங்கு மற்றும் கோலாலம்பூர் ஆகிய மாநிலங்களிலிருந்து 15 குழுக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றன.
சோழா கிண்ண கால்பந்து போட்டி குறித்து விவரித்த தம்பூன் விளையாட்டு நிகழ்வு மேலாண்மை விளையாட்டு மன்றத்தின் நிர்வாக இயக்குநரான லிங்கேஸ்வரன் அண்ணாமலை, 15 வயதுக்கு கீழ்பட்ட பதின்ம வயதுடைய நமது இந்திய இளையோர்கள் , கால்பந்தாட்டத்தில் சிறப்பதற்கு ஒரு சிறிய தளத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த சோழா கிண்ண கால்பந்துப் போட்டி நடத்தப்பட்டதாக விவரித்தார்.
சோழ கிண்ண கால்பந்து போட்டியின் ஆதரவாளரும், அதிகாரியுமான கோபாலன் முனியாண்டி விவரிக்கையில் 15 வயதுக்கு கீழ்பட்ட நமது இளையோர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்துவதற்கு இப்போட்டி ஒர வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது என்றார்.
சோழ கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் பேராக்கின் யங் ப்ரோ கால்பந்து கிளப் குழு முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. பினாங்கு கருடா குழு இரண்டாம் இடத்தையும், பேராக் எம்.கே. யுனைடெட் மற்றும் சிலாங்கூர் GGG சாக்கர் அகாடமி ஆகிய குழுக்கள் மூன்றாம் இடத்தையும் பகிர்ந்து கொண்டன.
தனிநபர் பிரிவில், நவீன் பரமேஸ்வரன் சிறந்த ஆட்டக்காரராகவும், சர்வேஸ்ராஜ் மனோகரன் சிறந்த கோல்கீப்பராகவும், பினாங்கு கருடா குழுவின் கிரிஷ் லினேஷ் சிறந்த பயிற்றுநராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்போட்டியைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழுத் தலைவர் லிங்கேஸ்வரன் அண்ணாமலை தெரிவித்தார்.









