டென்மார்க்கின் ஹார்சன்ஸ் நகரில் வரும் ஏப்ரல் 24 முதல் மே 3 வரை நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில், மலேசியக் குழு ஒரு ‘கறுப்பு குதிரை’யாக உருவெடுக்கும் என்று தேசிய வீரர் லீ ஜி ஜியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் வெண்கலப் பதக்க வெற்றியாளரான லீ ஜி ஜியா, மலேசியக் குழுவில் ஒவ்வொரு வீரரும் தங்களது பொறுப்பைச் சரியாகச் செய்தால், ஆச்சரியமான முடிவுகளை வழங்க முடியும் என்று குறிப்பிட்டார். மலேசியா கடைசியாக 1992-ஆம் ஆண்டு இக்கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை மூன்றாவது ஒற்றையர் வீரராகக் களமிறங்க வாய்ப்புள்ள லீ ஜி ஜியா, தனக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி முழுத் திறமையுடன் விளையாடப் போவதாகக் கூறினார். தன் மீது அதிக எதிர்பார்ப்புகளை ஏற்றிக் கொள்ளாமல், அணிக்காகப் பங்களிப்பதே தனது நோக்கம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
சமீபத்தில் கணுக்கால் காயத்தினால் பாதிக்கப்பட்டிருந்த லீ ஜி ஜியா, தற்போது 70 முதல் 80 சதவீத உடல் தகுதியைப் பெற்றுள்ளதாகவும், போட்டி தொடங்குவதற்குள் முழுத் திறனை எட்டுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசியா ‘பி’ பிரிவில் ஜப்பான், இங்கிலாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுடன் இடம்பெற்றுள்ளது. ஏப்ரல் 25-ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியுடன் மலேசியா தனது சவாலைத் தொடங்குகிறது.
லீ ஜி ஜியாவுடன் லியோங் ஜுன் ஹாவ், ஜஸ்டின் ஹோ மற்றும் எய்டில் ஷோலே ஆகியோர் ஒற்றையர் பிரிவிலும், ஆரோன் சியா - சோ வூய் யிக் இணை இரட்டையர் பிரிவிலும் மலேசியாவின் பலமாகத் திகழ்கின்றனர்.








