மலேசிய மகளிர் பேட்மிண்டன் அணி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள உபெர் கோப்பை தொடரில் 16 ஆண்டுகால காலிறுதித் தடையை உடைத்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் என தேசிய மகளிர் ஒற்றையர் பிரிவு பயிற்சியாளர் இஸ்கந்தர் சுல்கர்னைன் ஜைனுடின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மலேசிய அணி கடைசியாக கடந்த 2010-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற தொடரில்தான் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தது. அதன் பிறகு நடைபெற்ற ஏழு தொடர்களிலும் மலேசியா லீக் சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அணியில் உள்ள வீராங்கனைகளின் சிறப்பான ஆட்டத்திறனை அடிப்படையாகக் கொண்டு இந்த நம்பிக்கையைத் தான் கொண்டிருப்பதாக இஸ்கந்தர் கூறினார். இருப்பினும், 16 ஆண்டுகால இந்தத் தடையை உடைக்க வேண்டும் என்பதற்காக வீராங்கனைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை என்றும், அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போதுமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை மலேசிய அணி பி பிரிவில் ஜப்பான், துருக்கி மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
மலேசிய மகளிர் அணியின் சவாலை உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள பியர்லி டான் - எம். தினா ஜோடி வழிநடத்தவுள்ளது. இவர்களுடன் கார்மென் டிங் - ஓங் சின் யீ மற்றும் இளம் ஜோடியான லோ ஜி யூ - நோராகிலா மைசாரா ரம்டான் ஆகியோர் இரட்டையர் பிரிவில் பலம் சேர்க்கின்றனர். ஒற்றையர் பிரிவில் கே. லெட்சனா, வோங் லிங் சிங், சிதி சுலைகா அஸ்மி மற்றும் முன்னாள் உலக ஜூனியர் சாம்பியன் கோ ஜின் வே ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.








