மலேசியாவில் நடைபெறவுள்ள 2027 சீ கேம்ஸ் போட்டிகளுக்கான தயாரிப்பு பணிகளைத் தேசிய விளையாட்டு கவுன்சில் தீவிரப்படுத்தியுள்ள வேளையில், 70 சதவீதத்திற்கும் அதிகமான மலேசிய வீரர்கள் பதக்க மேடையை அலங்கரிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரானது 2027 செப்டம்பர் 18 முதல் 29 வரை சரவாக், பினாங்கு, ஜொகூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய மாநிலங்களில் கூட்டாக நடத்தப்படவுள்ளது.
இன்று நடைபெற்ற விளையாட்டு வீரர்களின் முன்னேற்றக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேசிய விளையாட்டு கவுன்சிலின் தலைமை இயக்குனர் ஜெஃப்ரி ஙாதிரின், உலகத் தரம் மற்றும் ஆசிய அளவிலான வீரர்களின் தற்போதைய செயல்திறன் மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த 70 சதவீத இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், வீரர்களுக்கு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த ஆதரவு சேவைகளை வழங்குவதற்காகச் சரவாக், கோலாலம்பூர் மற்றும் பினாங்கு ஆகிய இடங்களில் மூன்று விளையாட்டு கிராமக் குழுமங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார். இப்போட்டிகளை வெளிப்படைத்தன்மையுடன் கண்காணிக்கவும், தணிக்கை செய்யவும் முன்னாள் தேசிய வீராங்கனை டத்தோ மரினா சின் தலைமையில் ஒரு சுயாதீனக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜெஃப்ரி ஙாதிரின் குறிப்பிட்டார்.








