யூரோப்பா கான்ஃபரன்ஸ் லீக் கால்பந்துத் தொடரின் காலிறுதி ஆட்டத்தில், இத்தாலியின் ஃபியோரெண்டினா அணியிடம் தோல்வியடைந்த போதிலும், ஒட்டுமொத்த கோல் கணக்கின் அடிப்படையில் கிரிஸ்டல் பேலஸ் அணி முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறிப் புதிய வரலாறு படைத்துள்ளது.
நேற்று நடைபெற்ற காலிறுதியின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஃபியோரெண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியின் 17-வது நிமிடத்தில் கிரிஸ்டல் பேலஸ் வீரர் இஸ்மைலா சார் முதல் கோலை அடித்துத் தனது அணிக்கு முன்னிலை தேடித் தந்தார். இருப்பினும், பின்னர் சுதாரித்துக் கொண்ட ஃபியோரெண்டினா அணியின் ஆல்பர்ட் குட்மண்ட்சன் மற்றும் செர் நடூர் ஆகியோர் அடுத்தடுத்து கோல்களை அடித்துத் தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், முதல் சுற்றில் 3-0 எனப் பெரும் முன்னிலை பெற்றிருந்த கிரிஸ்டல் பேலஸ் அணி, ஒட்டுமொத்தமாக 4-2 என்ற கோல் கணக்கில் அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டது. கடந்த சீசனில் எஃப்ஏ கோப்பையை வென்று சாதனை படைத்த கிரிஸ்டல் பேலஸ், தற்போது தனது முதல் ஐரோப்பியத் தொடரிலேயே அரையிறுதி வரை முன்னேறியிருப்பது அந்த அணியின் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வருகிற ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் கிரிஸ்டல் பேலஸ் அணி, உக்ரைனின் ஷக்தார் டொனெட்ஸ்க் அணியை எதிர்கொள்ள உள்ளது. மற்றொரு அரையிறுதிப் போட்டியில் பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க் மற்றும் ஸ்பெயினின் ராயோ வாலெகானோ ஆகிய அணிகள் மோதவுள்ளன.








