நாட்டின் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் விளையாட்டு நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடும் விளையாட்டு வீரர்களின் நலனுக்கான உதவிகளும் முழுமையாகப் பேணப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் உறுதியளித்துள்ளார். விளையாட்டுத் துறை நாட்டின் எதிர்பார்க்கையை விடச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், விளையாட்டு வீரர்களின் நலனே முதன்மையான காரணியாகக் கருதப்பட வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும், விளையாட்டு அமைச்சு தன்னிடம் உள்ள கூடுதல் நிதி ஒதுக்கீடுகளை வீரர்களின் வசதிக்கும் பயிற்சிக் களங்களை மேம்படுத்தும் பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பல்லின மக்களையும், மதங்களையும் கொண்ட மலேசியாவில் மக்களை ஒன்றிணைக்கும் மிகச்சிறந்த ஊடகமாக விளையாட்டு திகழ்கிறது என்று பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்தார். அரசியலில் நிலவும் வேறுபாடுகளைத் தாண்டி, விளையாட்டு மைதானங்களில் மக்கள் எவ்வித இன, மத பாகுபாடின்றி வீரர்களுக்கு வழங்கும் தன்னிச்சையான ஆதரவுதான் நாட்டின் உண்மையான ஒற்றுமைக்கு அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.








