மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் விமானக் கட்டண உயர்வு ஆகிய சவால்களுக்கு மத்தியிலும், அடுத்த மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள 2026 செபக் தக்ரோ உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்க ஈரான் அணி தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.
அனைத்துலக செபக் தக்ரோ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டத்தோ அப்துல் ஹலீம் காதர் இது குறித்துக் கூறுகையில், ஈரான் அணியினர் சாலை மார்க்கமாகத் தெஹ்ரானிலிருந்து துருக்கிக்குச் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் கோலாலம்பூர் வரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். போர்க் காலச் சூழலால் விமானக் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்திருந்தாலும், போட்டியில் பங்கேற்பதில் ஈரான் அணி உறுதியாக உள்ளது. அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க மலேசிய செபக் தக்ரோ கூட்டமைப்பிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த உலகக் கிண்ணத் தொடர் மே 16 முதல் 23 வரை கோலாலம்பூரில் உள்ள தித்திவாங்சா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில் 'பிரீமியர்' பிரிவில் மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா உட்பட மொத்தம் 14 நாடுகள் போட்டியிடுகின்றன.
அதேசமயம், மேற்கு ஆசிய மோதல்கள் காரணமாக 'டிவிஷன் 1' பிரிவில் பங்கேற்க வேண்டிய ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல அணிகள் இன்னும் தங்கள் வருகையை உறுதிப்படுத்தவில்லை. இதனால் ஏப்ரல் 15-ஆம் தேதி பிரீமியர் பிரிவுக்கான குலுக்கல் நடைபெறும் என்றும், போதிய அணிகள் வராத பட்சத்தில் டிவிஷன் 1 போட்டிகள் ரத்து செய்யப்பட்டு, பிரீமியர் பிரிவில் மட்டும் கவனம் செலுத்தப்படும் என்றும் பி.எஸ்.எம் தலைவர் டத்தோ முகமட் சுமாலி ரெடுவான் தெரிவித்துள்ளார்.








