டென்னிஸ் உலகின் ஜாம்பவான் ஆன்ட்ரே அகாசி, மலேசியாவில் பிக்கிள்பால் விளையாட்டு மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாகவும், இதற்கு இங்கு பெரும் எதிர்காலம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 'ஜூலா டைட்டன்ஸ் டூர் 2026' பிக்கிள்பால் தொடருக்காகக் கோலாலம்பூர் வந்துள்ள அவர், இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விளையாட்டின் உலகளாவிய வளர்ச்சி இன்னும் தொடக்க நிலையிலேயே இருப்பதாகவும், வரும் ஆண்டுகளில் இது பன்மடங்கு பெருகும் என்றும் கூறினார்.
பிக்கிள்பால் விளையாட்டு எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக நம்பிக்கை தெரிவித்த அகாசி, இது ஒரு எதார்த்தமான இலக்கு என்றும் குறிப்பிட்டார். இந்தச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, உலகின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றான மெர்டேகா 118-இல், அகாசி தலைமையிலான அணிக்கும் உலகின் முதல் நிலை வீரர் பென் ஜான்ஸ் தலைமையிலான அணிக்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி நடைபெறவுள்ளது. மலேசியாவில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்த விளையாட்டிற்கான மைதானங்களின் எண்ணிக்கை 70-லிருந்து 200-க்கும் மேலாக அதிகரித்துள்ளது அதன் அபரிமிதமான வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.








