பேட்மிண்டன் விளையாட்டில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த 21 புள்ளிகள் கொண்ட ஆட்டமுறைக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் அண்மைய முடிவின்படி, வரும் 2027-ஆம் ஆண்டு முதல் 15 புள்ளிகள் கொண்ட புதிய ஆட்டமுறை அமலுக்கு வருகிறது.
ஒளிபரப்பு நேரத்தை முறைப்படுத்தவும், ரசிகர்களைக் கவரவும் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மாற்றத்தால் வீரர்கள் மத்தியில் பிளவுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. சில வீரர்கள் இது உடல் ரீதியான அழுத்தத்தைக் குறைக்கும் என்று வரவேற்றாலும், ஆட்டத்தின் நுணுக்கங்கள் மற்றும் சகிப்புத்தன்மை பாதிக்கப்படும் என்று மூத்த வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மலேசிய பேட்மிண்டன் சங்கமும் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், நமது நாட்டு வீரர்கள் இந்தப் புதிய சவாலுக்குத் தயாராகி வருகின்றனர். விறுவிறுப்பு கூடுமா அல்லது விளையாட்டின் தரம் குறையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.








