இவ்வாண்டு நடைபெறவுள்ள சுகுமா விளையாட்டுப் போட்டிகளை ஒத்தி வைக்குமாறு மேன்மை தங்கிய சிலாங்கூர் மாநில சுல்தான் ஷராஃபுடின் இத்ரிஸ் ஷா, பரிந்துரைத்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் நிலைமையை கருத்தில் கொண்டு, எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள இந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளை, நடத்துவது பொருளாதார ரீதியாக கடினமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், இந்த போட்டிகளை நடத்துவது அதிக செலவை ஏற்படுத்தும் என்றும் சுல்தான் ஷராஃபுடின் இத்ரிஸ் ஷா குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மத்திய கிழக்கு மோதல் பிரச்சினை தீரும் வரை மற்றும் ஷா ஆலம் விளையாட்டு வளாகம் முழுமையாக கட்டி முடிக்கப்படும் வரை சுகுமா போட்டிகளை ஒத்திவைப்பது பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், இவ்வாண்டிற்கான சிலாங்கூர் மற்றும் சிங்கப்பூர் அணிகள் இடையிலான சுல்தான் ஆஃப் சிலாங்கூர் கோப்பை கால்பந்து போட்டியையும் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை அவர், 15-வது சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடக்க விழாவில் வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்வானது, சிலாங்கூர் மாநில செயலகக் கட்டிடத்தில் இன்று நடைபெற்றது.
நிலவி வரும் சர்வதேச சூழ்நிலையும், பொருளாதார சவால்களையும் கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








