காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற 'குளோபல் சுமூத் புளோட்டிலா 2.0' (GSF 2.0) என்ற சர்வதேச உதவிக்கப்பல் குழுவை இஸ்ரேலிய இராணுவம் சர்வதேசக் கடற்பரப்பில் மறித்து, அதிலிருந்த 16 மலேசியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மனித உரிமை ஆர்வலர்களைக் கைது செய்து சிறைபிடித்துள்ளது.
சைப்ரஸ் நாட்டுக்கு அருகேயுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து இஸ்ரேலிய இராணுவத்தால் இந்தக் கப்பல்கள் மறிக்கப்பட்டதாக மலேசியாவில் உள்ள 'தி சுமூத் நுசாந்தாரா' கட்டளை மையம் (SNCC) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இஸ்ரேலிய ஆட்சியின் இந்தச் செயல் மனித உரிமைகளையும் சர்வதேச கடல்சார் சட்டங்களையும் முற்றிலும் மீறும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை என்றும், சிறைபிடிக்கப்பட்டுள்ள மலேசியர்கள் உட்பட அனைத்து ஆர்வலர்களின் பாதுகாப்பிற்கு இஸ்ரேல் உத்தரவாதம் அளிப்பதோடு அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








