Apr 28, 2026
Thisaigal NewsYouTube
16 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா காலிறுதிக்குத் தகுதி; கேப்டன் தினா ஏமாற்றம்
விளையாட்டு

16 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா காலிறுதிக்குத் தகுதி; கேப்டன் தினா ஏமாற்றம்

Share:

2026 உபெர் கோப்பை இறகுப்பந்து தொடரின் பி பிரிவில், ஜப்பானுக்கு அடுத்தபடியாக மலேசிய அணி இரண்டாவது இடத்தைப் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசிய பெண்கள் அணி இத்தொடரில் காலிறுதிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. இருப்பினும், அணியின் கேப்டன் எம். தினா ஒரு புள்ளியைக் கூட பெற்றுத் தர முடியாமல் போனது தமக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

டென்மார்க்கின் ஹார்சென்ஸில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில், ஆறு முறை சாம்பியனான ஜப்பான் 4-1 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. இதில் தினா மற்றும் இளம் வீராங்கனை ஓங் சின் யீ இணை, ஜப்பானின் உலகின் ஆறாம் நிலை இணையான யுகி புகுஷிமா - மாயு மட்சுமோட்டோவிடம் 9-21, 9-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. முன்னதாக துருக்கிக்கு எதிரான ஆட்டத்திலும் தினா ஜோடி தோல்வியைத் தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

"அணியின் கேப்டனாகவும், குழுவில் மூத்த வீராங்கனையாகவும் இருந்தும் ஒரு புள்ளியைக் கூட பங்களிக்க முடியாதது எனக்கு ஏமாற்றமாக உள்ளது," என்று தினா பெர்னாமாவிடம் தெரிவித்துள்ளார். எனினும், தனது சக வீராங்கனைகளின் கூட்டு முயற்சியால் 2004, 2008 மற்றும் 2010-க்குப் பிறகு மலேசியா நான்காவது முறையாகக் காலிறுதிக்கு முன்னேறியிருப்பது தமக்கு மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக அவர் கூறினார். தென் ஆப்பிரிக்காவை 5-0 எனவும், துருக்கியை 3-2 எனவும் வீழ்த்தியதன் மூலம் மலேசியா இந்த இடத்தைப் பிடித்துள்ளது.

Related News