கோலாலம்பூர், மார்ச்.29-
1998 காமன்வெல்த் போட்டியில் 50 கிலோ மீட்டர் நடைப் பந்தயத்தில் தங்கம் வென்று தேசத்திற்குப் பெருமை சேர்த்த ஜி. சரவணன், கடந்த 2021 முதல் motor neurone disease எனும் கொடிய நோயால் பேசவும், நடக்கவும், உணவு உட்கொள்ளவும் முடியாமல் முடங்கிக் கிடப்பது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எத்தனையோ மைல் தூரங்களை மிகச் சாதாரணமாகக் கடந்த அந்த கால்கள் இன்று செயலிழந்து போனாலும், ஒரு இலட்சம் ரிங்கிட் மருத்துவக் கட்டணத்தையும் உடல்நலப் பாதிப்புகளையும் தாண்டி, தனது குடும்பத்தின் அரவணைப்போடு அவர் ஒரு நிஜப் போராளியாகத் தனது வாழ்வின் மிகக் கடினமான நிலையில் போராடி வருகிறார்.
அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை பாதியாகக் குறைந்து, செயற்கைச் சுவாசக் கருவியின் உதவியோடு மூச்சு விடும் நிலையில் இருக்கும் சரவணன், இன்று தனது தேவைகளைச் சைகை மொழியில் மட்டுமே சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பார்ப்பவர் நெஞ்சைப் பிசைய வைக்கிறது. நாட்டின் புகழை உலகறியச் செய்த இந்த சாதனையாளரைக் காக்க அவரது குடும்பம் நிதி நெருக்கடியிலும் தன்னம்பிக்கையோடு போராடி வரும் வேளையில், தடகள உலகின் இந்தச் சிங்கத்தை மீண்டும் மீட்டெடுக்க நல்லுள்ளங்களின் ஆதரவும் பிரார்த்தனைகளும் அவசியமாகிறது.








