ஷா ஆலாம், ஏப்ரல்.26-
2026-ஆம் ஆண்டு சிலாங்கூரில் நடைபெறவிருந்த மலேசிய விளையாட்டுப் போட்டியான சுக்மாவை சிக்கனமான செலவினங்களுடன் திட்டமிட்டபடி நடத்துவதற்குச் சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதீன் இட்ரிஸ் ஷா அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார். உலகப் பொருளாதாரச் சூழல், அதிகரித்த செலவுகள் ஆகியவைக் காரணமாக இந்தப் போட்டிகள் ஒத்தி வைக்கப்படலாம் என்று பேசப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுல்தானைச் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இந்த நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இளம் வீரர்களின் திறமையை வெளிப்படுத்தவும், 2027-ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெறவுள்ள தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அவர்களைத் தயார்படுத்தவும் இந்தப் போட்டிகள் மிக முக்கியமானது என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் முஹமட் தௌஃபிக் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.








