ஆசிய சாம்பியன்ஸ் லீக் மகளிர் கால்பந்து அரையிறுதிப் போட்டியில், வடகொரியா மற்றும் தென்கொரிய அணிகள் மோதவுள்ளன. சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் முதல் விளையாட்டு மோதலாக இது கருதப்படுகிறது.
வடகொரியாவின் 'நேகோயாங் மகளிர் எஃப்சி' அணி, தென்கொரியாவின் 'சுவோன் எஃப்சி மகளிர்' அணியுடன் வரும் புதன்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதற்காக வடகொரியாவிலிருந்து 27 வீராங்கனைகள் மற்றும் 12 பணியாளர்கள் அடங்கிய குழுவினர் பெய்ஜிங் வழியாகத் தென்கொரியாவிற்குச் செல்லவுள்ளனர். இவர்கள் தென்கொரியாவின் சுவோன் நகரில் உள்ள ஹோட்டலில் தங்குவார்கள் என்றும், இரு அணி வீரர்களும் சந்திப்பதைத் தவிர்க்கும் வகையில் தனித்தனி உணவருந்தும் இடங்கள் மற்றும் பயண வழிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் பதற்றங்கள் காரணமாக விளையாட்டு ரீதியிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. தற்போது நடைபெறும் இந்தப் போட்டியானது ஒரு கிளப் அளவிலான போட்டி என்பதால், இரு நாடுகளின் தேசியக் கொடிகளோ அல்லது தேசிய கீதங்களோ பயன்படுத்தப்பட மாட்டாது. இரு நாட்டு இளைஞர்களுக்கும் இடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுமார் 2,500 ஆதரவாளர்கள் மைதானத்தில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.








