இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து கிளப்பான செல்சி, 2024-25 நிதியாண்டில் 262.4 மில்லியன் பவுண்ட் (சுமார் 350 மில்லியன் டாலர்) வரிக்கு முந்தைய நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது. இது பிரீமியர் லீக் வரலாற்றிலேயே ஒரு கிளப் சந்தித்த மிக அதிகமான ஆண்டு நஷ்டமாகும். இதற்கு முன்னதாக 2010-11 பருவத்தில் மான்செஸ்டர் சிட்டி கிளப் சந்தித்த 197.5 மில்லியன் பவுண்ட் நஷ்டமே சாதனையாக இருந்தது. கிளப்பின் வருவாய் 490.9 மில்லியன் பவுண்டாக உயர்ந்திருந்த போதிலும், செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்ததே இந்த நிலைக்குக் காரணம் என்று கிளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 128.4 மில்லியன் பவுண்ட் லாபம் ஈட்டியிருந்த செல்சி, இந்த ஆண்டு இவ்வளவு பெரிய நஷ்டத்தைச் சந்தித்திருப்பது கால்பந்து உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், பிரீமியர் லீக்கின் லாபம் மற்றும் நிலைத்தன்மை விதிகளின்படி (PSR), செல்சி கிளப் இன்னும் விதிமுறைகளுக்கு உட்பட்டே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளப் உலகக் கோப்பையில் பங்கேற்றதன் மூலம் கிடைத்த வருவாய் மற்றும் வீரர்களின் சந்தை மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் வருங்காலத்தில் நிதி நிலையைச் சீராக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், கடந்த ஓராண்டில் மட்டும் ஏஜெண்டுகளுக்கான கட்டணமாக செல்சி சுமார் 65.1 மில்லியன் பவுண்ட் செலவழித்துள்ளது, இது மற்ற அனைத்து பிரீமியர் லீக் கிளப்புகளை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நிதி நெருக்கடிகள் ஒருபுறம் இருந்தாலும், வரும் காலங்களில் வருவாயை 700 மில்லியன் பவுண்டாக உயர்த்த கிளப் திட்டமிட்டுள்ளது








