மலேசியத் தேசிய செபாக் தக்ரோ அணி உலகக் கோப்பை செபாக் தக்ரோ தொடரின் குவாட்ரண்ட் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இறுதிப்போட்டியில் இந்திய அணியை 2-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி மலேசியா இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. முகமட் அபிஃபுதீன் முகமட் ரசாலி, முகமட் ஷாஹல்ரில் ஐமான் ஹலிம், அமிருல் ஜாஸ்வான் அமீர் மற்றும் அய்டில் ஐமான் அஸ்வாவி ஆகிய வீரர்களைக் கொண்ட மலேசியக் கூட்டணி, மைதானத்தில் திரண்டிருந்த சுமார் 3,000 ரசிகர்களின் பலத்த ஆதரவோடு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த மகுடத்தைச் சூடியது.
இந்த மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது முகநூல் பக்கத்தின் வாயிலாக தேசிய தக்ரோ வீரர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். மலேசிய வீரர்களை 'தேசிய ஹீரோக்கள்' என்று புகழ்ந்துள்ள அவர், வீரர்களின் இந்தத் தீரமிக்கப் போராட்டக் குணம் ஒட்டுமொத்த மலேசியர்களுக்கும் பெருமை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த உலகளாவிய வெற்றி மலேசியாவை உலக அரங்கில் உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், நம் நாட்டு விளையாட்டு வீரர்களின் சகிப்புத்தன்மை, கூட்டு இலக்கு மற்றும் சர்வதேச அளவில் சாதிக்கும் திறமை ஆகியவற்றை நிரூபித்துக் காட்டியுள்ளதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.








