வரவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரலாற்றிலேயே மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மற்றும் அதிகப்படியான கார்பன் உமிழ்வைக் கொண்ட விளையாட்டு நிகழ்வாக இருக்கும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் லொசேன் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகளின்படி, இந்தத் தொடர் சர்வதேச விளையாட்டு வரலாற்றில் மிகப்பெரிய கார்பன் தடம் பதிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக 48 அணிகள் பங்கேற்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. பல்கலைக்கழகத்தின் கணக்கீட்டின்படி, இத்தொடரின் மூலம் உருவாகும் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு 5 முதல் 9 மில்லியன் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2024 பாரிஸ் ஒலிம்பிக் 1.75 மில்லியன் டன்கள் 2018 ரஷ்ய உலகக் கோப்பை 2.17 மில்லியன் டன்கள் மற்றும் தீவிரமாக விமர்சிக்கப்பட்ட 2022 கத்தார் உலகக் கோப்பை 3.17 மில்லியன் டன்கள் ஆகியவற்றை விட பல மடங்கு அதிகமாகும்.
போட்டிகள் நடைபெறும் 16 மைதானங்களும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளவை என்றாலும், மைதானங்களுக்கு இடைப்பட்ட தூரம் மிக அதிகமாக இருப்பதுதான் இந்த உமிழ்வு அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. உதாரணமாக, மியாமி முதல் வான்கூவர் வரையிலான தூரம் 4,500 கிலோமீட்டர்களுக்கும் அதிகம் என்பதால், 5 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள், வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொடர்ச்சியான விமானப் பயணங்கள் மூலம் கார்பன் வெளியேற்றம் வரலாறு காணாத அளவில் உயரும். ஒரு உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆட்டம் மட்டுமே சுமார் 44,000 முதல் 72,000 டன்கள் வரையிலான கார்பன் உமிழ்வுக்குக் காரணமாகிறது என்று 'Scientists for Global Responsibility' அமைப்பின் அறிக்கை குறிப்பிடுகிறது. பிஃபாவின் (FIFA) இந்த எல்லையற்ற வளர்ச்சி ஆசை, சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருவதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.








